வெள்ளி, 6 மார்ச், 2020

உருவு கண்டு ......

உருவு கண்டு ......
------------------------------






காலியாக கிடந்த பக்கத்து வீட்டிற்கு ஆள் வந்து விட்டார்கள் . ஒரு முதியவர் . அவரது மனைவி . பெரியவர் டில்லியில் மத்திய அரசு உத்தியோகத்தில் இருந்து ஓய்வு பெற்றவர் .இருவரும் நிரந்தரமாக இங்கே இருக்கப் போகிறவர்கள் .

தற்காலிகமாக இரு இளம் பெண்கள் . பெரியவரின் மகள் வயிற்றுப் பேத்திகள் . படிப்பு பெங்களூரில் . பெற்றோர்கள் டான்சேனியாவில் இருப்பதால் விடுமுறையைக் கழிக்க தாத்தா வீடு . தகவல்கள் உபயம் என் மனைவி.


வழக்கம் போல் மனைவி அவர்களோடு எளிதில் சகஜமாகி விட்டாள் . பெரியவர்களுக்கு பக்திப் பாடல்கள் .இளையோருக்கு ரமணிசந்திரன் . காட்டிக் கவிழ்த்து விட்டாள் .மூன்றாம் நாள் மூத்தவளோடு என் அறைக்குள் வந்தாள் .


” இது மல்லிகா ” என்று ஆரம்பித்து விரிவாக அறிமுகம் செய்தாள் . ”படிக்கிறதிலே ரொம்ப ஆர்வம் . உங்ககிட்ட நெறைய புத்தகம் இருக்குன்னு சொன்னதும் உடனே வரணும்ட்டா . “


அடுக்கப் பட்டிருந்த புத்தகங்களை பார்த்து விழிகள் விரிய ” ஃபண்டாஸ்டிக் கலக்‌ஷன் ” என்றாள் மல்லிகா .


” எல்லாம் கொஞ்ச ஹெவி சப்ஜக்ட்ஸ் . உங்களுக்கு பிடிக்குமான்னு தெரியலே . “ மனதிற்குள் ” புரியுமான்னு தெரியலே “


நீட்ஷே , ஹெகல் , சார்த்ரு , ஃபோர்ஹே ....


வரிசையாக பார்த்தாள் . ஒரு புத்தகத்தை தூக்கிக் காட்டினாள் . பின் நவீனத்துவம் பற்றியது . “ இது கூட வச்சிருக்கீங்களா ” ஆச்சரியக் குரல் .


எனக்கே புரியாத புத்தகம் அது . இன்னும் நாலைந்து தடவையாவது படிக்கும் உத்தேசத்தில் இருந்தேன் .


அவள் புத்தகத்தை திருப்பினாள் . பின் அட்டை பார்வையில் வந்தது . புகைப்படத்துடன் ஆசிரியர் பற்றிய குறிப்பு . புகைப்படத்தில் மல்லிகா சிரித்துக் கொண்டிருந்தாள் .
” ஐநூறு பிரிண்ட் போட்டேன் . ஐம்பது கூட விற்கவில்லை . “ மல்லிகா சொன்னாள் புகைப்படத்தில் இருந்த அதே புன்னகையோடு .


*********************************************************************


[ பாக்யா , மார்ச் 13 – 19 , 2015 இதழில் வெளியாகியுள்ள எனது ஒரு பக்கக் கதை . ]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக